2 நாளைக்கு ஷட் டவுன்..இரண்டு நாளைக்கு மின் சேவைகள் கிடைக்காது! தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல்
சென்னை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மின் வாரியத்தின் இணைய சேவைகள் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு வேகமான மற்றும் மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், தாழ்வழுத்த மின் கட்டண வசூல் மென்பொருளை புதிய முறைக்கு மற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் மின் கட்டணம் செலுத்தும் சேவைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.
குறிப்பாக காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட அடையார் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அடையார், தகவல் தொழில்நுட்ப வழித்தடம், தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் இந்த சேவை பாதிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதிகளிலும் சேவைகள் செயல்படாது. சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அண்ணாநகர், அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளிலும் இந்த தற்காலிக சேவை நிறுத்தம் அமலாகும்.
இந்த பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்துவது, மின் வாரிய கவுண்டர்களில் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை இந்த சேவைகள் முடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, அனைத்து சேவைகளும் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என்று மின் வாரியம் உறுதியளித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான பணிகளை செய்து கொள்ளுமாறும், மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் தாமதிக்காமல் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தற்காலிக சிரமத்திற்கு மின்நுகர்வோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. நுகர்வோருக்கு மேம்பட்ட மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) தனது தாழ்வழுத்த (LT) பில்லிங் மென்பொருளை புதிய சர்வர்கள் மற்றும் தரவுகளை புதிய தரவுத்தளத்திற்க்கு ஏற்றவாறு மேம்படுத்தும் பணிகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட அடையார் மின்பகிர்மான வட்டத்தின் அடையார், ஐ.டி காரிடார், தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் கோட்டங்கள், சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டத்தின் கே.கே.நகர், போரூர், கிண்டி கோட்டங்கள் மற்றும் சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்தின் அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி கோட்டங்கள் ஆகியவற்றின் மின் நுகர்வோர்கள் மின் கட்டண வசூல் தொடர்பான கவுண்டர் மற்றும் ஆன்லைன் சேவைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் ஆகியவை 23.05.2026 (சனிக்கிழமை) 00.00 மணி முதல் 24.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 24.00 மணி வரை தற்காலிகமாக இயங்காது.
பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்து சேவைகளும் வழக்கம்போல் மீண்டும் செயல்படுத்தப்படும். பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் இதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் தற்காலிக சிரமத்திற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வருந்துவதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications