30 வயது வரை மட்டுமே திமுக இளைஞரணியில் இருக்க முடியும்-ஸ்டாலின்
சென்னை: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றத்தின் காரணத்தினால் இளைஞர்களிடையே இன உணர்வு மாறி விட்டது. கலாசார மாற்றம் ஏற்பட்டாலும் அண்ணா, பெரியாரின் லட்சியத்தை இன உணர்வை என்றும் மறக்க கூடாது என்று திமுக பொருளாளரும், இளைஞரணி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
வட சென்னை மாவட்டத்தின் எழும்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், துறைமுகம், திருவிக நகர், பெரம்பூர், ஆர்கே நகர் ஆகிய பகுதிகளுக்கு இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடந்தது. திமுக பொருளாளரும், இளைஞரணித் தலைவருமான ஸ்டாலின் 550 பேரிடம் நேர்காணலை நடத்தினார். முன்னதாக அவர் பேசுகையில்,
இந்த இயக்கத்தில் இளைஞர்களுக்கு பல பொறுப்புகள் காத்திருக்கின்றன. தேர்தலில் நாம் மிகப் பெரிய தோல்வியை தழுவினோம். அதற்கு மறுக்க முடியாத ஒரு காரணம், இளைஞர்களும், மாணவர்களும் நமக்கு போதிய ஆதரவு தரவில்லை என்பதுதான்.
இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இன உணர்வு குறைந்து கொண்டே வருகிறது. நவீன தொழில்நுட்ப மாற்றம் காரணமாக இன உணர்வு மாறிவிட்டது. இன உணர்வையும், திராவிட இயக்க லட்சியத்தையும் நாம் மறக்கக் கூடாது. கலாசார மாற்றம் ஏற்பட்டாலும் அண்ணா, பெரியாரின் லட்சியத்தை இன உணர்வை என்றும் மறக்க கூடாது.
இளைஞர் அணியில் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டும்தான் இருக்க முடியும். இளைஞர் அணி நியமனத்தில் எந்தப் பரிந்துரைகளும், சிபாரிசும் கிடையாது. மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகின்றனர். இங்கு வந்திருக்கும் இளைஞர்கள் பொறுப்பு கிடைக்கவில்லை என்று ஏமாற்றம் அடைய வேண்டாம். இதில் தேர்வு செய்யப்படாதவர்கள் மாணவரணி, தொண்டரணி, வழக்குரைஞர் அணி உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படும்
ஒருவரே தொடர்ந்து பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை காரணமாக மற்றவர்களுக்கு வாய்ப்பு தர முடியவில்லை. எனவேதான் நேர்காணல் மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்கிறோம். இன்று 550 பேர் மனுக்கள் தந்துள்ளனர். எந்த தவறும் இல்லாமல் முறைப்படி மதிப்பெண் அடிப்படையில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல் 5, 6 நாட்களில் வெளியிடப்படும்.
திமுகவில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் அதிக சிறப்பும், முதன்மையாகவும் திகழ்கிறது. இளைஞர் அணி 1980ம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது. இதுவரை பகுதிக்கு ஒரு அமைப்பாளரும், 2 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இனி ஒரு அமைப்பாளர், 4 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் ஸ்டாலின்.