10 நாளாக குடிநீர் கட்: காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
நெல்லை: கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததைக் கண்டித்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட 1, 2, 3, 4 மற்றும் 55 வார்டு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்குள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது குழாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் அழுத்தம் காரணமாக மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் குழாயை சரி செய்யும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி தச்சநல்லூர் 3வது வார்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள், கவுன்சிலர் கொப்பரை சுப்பிரமணியன் தலைமையில் காலி குடங்களுடன் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி கவுன்சிலரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் தச்சநல்லூர் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே குழாயை உடனே சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.