பாக்.- இலங்கை இடையேயான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ராஜபக்சே மும்முரம்
பாகிஸ்தானுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்தித்துப் பேசினார்.
இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை எதிர்வரும் 3 ஆண்டுகளில் 2 பில்லியனாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
இதேபோல் இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரத்தில் தொடர்ந்து உதவுவதாகவும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ராஜபக்சேவுக்கு உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு ராணுவதளவாடங்களை வழங்கும் நாடுகளில் பாகிஸ்தானும் முதன்மையான நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் ராஜபக்சே சர்தாரியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இருநாடுகளிடையேயான நேரடி கப்பல் போக்குவரத்தை இயக்குவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியையும் ராஜபக்சே சந்தித்துப் பேச உள்ளார். தக்சிலா என்ற இடத்தில் உள்ள புத்த விகாரையிலும் ராஜபக்ச வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.