கூர்க்காலாந்து பிரச்சனையில் இழுத்தடிக்கும் மத்திய அரசு- மமதா காட்டம்
கொல்கத்தா: டார்ஜிலிங்கில் கூடுதல் அதிகாரம் கொண்ட புதிய கூர்க்காலாந்து கவுன்சிலுக்கு அங்கீகாரம் அளிக்காமல் மத்திய அரசுதான் தாமதிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பின் பொதுச்செயலாளர் ரோசன் கிரி தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மமதா இதனைத் தெரிவித்துள்ளார்.
கூர்க்காலாந்து அமைப்பினருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே கூடுதல் அதிகாரம் கொண்ட கூர்க்காலாந்து கவுன்சில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு உடனே இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை. இது தொடர்பாக மாநில அரசிடம் பல்வேறு சந்தேகங்களை மத்திய அரசு கேட்டு வருகிறது.
இதனால் புதிய கவுன்சில் அமைப்பது நடைமுறைக்கு வரவில்லை. இதில் அதிருப்தி அடைந்த கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினர் மார்ச் 27-ந் தேதிக்குள் கூடுதல் அதிகாரம் கொண்ட புதிய கவுன்சிலை அமைக்க கெடு விதித்திருந்தனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மமதா பானர்ஜி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் தாமதிப்பதாகவும் போராட்டத்தை தொடங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பின் பிரதிநிதிகளுடன் மமதா ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 22-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை தாம் சந்திக்க உள்ளதாகவும் இதனால் போராட்டத்தை கைவிடுமாறும் இச்சந்திப்பின் போதும் மமதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பிப்ரவரி 28-ந் தேதி டார்ஜிலிங்க் நகரத்துக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் மமதா உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications