அரசு நலத்திட்ட விழா – ஜெ. நாளை திருச்சி பயணம்: பாதுகாப்பு தீவிரம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா தற்போது 2-வது முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதற்காக திருவானைக்காவல் ஜம்பு கேஸ்வரர் கோவில் வளாகத்தில் வடக்கு உள்வீதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜெயலலிதா வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க திருச்சி மாநகரம் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. திருச்சி மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விழா நடைபெறும் மேடை, முதல்- அமைச்சர் செல்லும் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்வதற்தகாக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு முத்துச்சாமி சனிக்கிழமையன்று திருச்சி சென்றார். இதனிடையே விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், கே.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் பார்வையிட்டனர். விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
தனி விமான பயணம்
விழாவில் கலந்து கொள்வதற்காக திங்கட்கிழமை மதியம் சென்னையில் இருந்து தனிவிமானத்தில் ஜெயலலிதா திருச்சி செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு டி.வி.எஸ். டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, கும்பகோணத்தான் சாலை, திருவானைக்காவல் மெயின் ரோடு, சன்னதி வீதி வழியாக விழா மேடைக்கு செல்கிறார். மதியம் 2 மணிக்கு தொடங்கும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.
முதல்வர் ஜெயலலிதா தன்னை வெற்றி பெறச்செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் 3 நாள் பயணமாக திருச்சி சென்றார். அப்போது ஸ்ரீரங்கத்தில் நடந்த விழாவில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications