திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரம்...அதிமுக கவுன்சிலரின் வேட்டியை உருவிய தொண்டர்கள்!
காட்பாடி: காட்பாடியில் அதிமுக கவுன்சிலரின் வேட்டியை அக்கட்சித் தொண்டர்களே உருவியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடியில் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் இரண்டு பேர் ஆதரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கூட்டம் முடிந்த பிறகு அந்த 2 கவுன்சிலர்களும் வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. அப்போது திடீர் என்று அதிமுக கவுன்சிலர் ஒருவரின் வேட்டியை தொண்டர்கள் உருவினர்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் போது எல்லாம் எதிர்தரப்பு வேட்டி, சட்டையை கிழிப்பதும், அவிழ்த்துவிடுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இந்த கலாச்சாரம் தற்போது அதிமுகவுக்குள்ளும் புகுந்துள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் அதிமுக கவுன்சிலர் ஒருவரின் வேட்டி உருவப்பட்ட சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.