மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
சேலம்: சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். கடந்த சில மாதங்களாக அவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் மாணவிகளின் எதிர்கால நலன் கருதி பெற்றோர் இது குறித்து வெளியில் கூற பயந்தனர். இதனையடுத்து அன்பழகன் தொடர்ந்து அநாகரீக செயலில் தைரியமாக ஈடுபட்டு வந்தார். இதனை மாவட்ட அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. முதல்வரின் தனிப்பிரிவின் புகாரின்பேரில் போலீஸ் அதிகாரிகள் மணிவிழுந்தான் அரசு பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் அன்பழகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனால் அன்பழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.