கத்தி முனையில் காதலனை கடத்தி திருமணம் செய்த 'புதுமைப் பெண்' கைது!
விருதுநகர்: காதலனை கத்தி முனையில் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (24). ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பூவாணி கிராமத்தில் தலையாரியாக உள்ளார். வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (27). ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முத்துலட்சுமியும், முத்துக்கிருஷ்ணனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் முத்துக் கிருஷ்ணனின் தந்தை பிலாவடியான அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்துலட்சுமி ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து நேற்று அவர் தனது உறவினர் காசி உள்பட 10 பேரை அழைத்துக் கொண்டு தனது காதலன் வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்றார். அங்கு முத்துக்கிருஷ்ணனிடம் நயமாகப் பேசி வெளியே அழைத்து வந்தார்.
வெளியே வந்தவுடன் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி ஆட்டோவில் ஏற்றி மேலத்தொட்டியபட்டிக்கு கடத்திச் சென்றனர். அங்கு முத்துக்கிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. இது பற்றி அறிந்த பிலாவடியான் தனது மகனை தலையாரி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவி செய்து முத்துலட்சுமி மற்றும் அவருடைய உறவினர் காசி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் முத்துக்கிருஷ்ணனை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதை அவர் ஒப்புக கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications