உ.பியில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸை ஆதரிப்போம்-முலாயம் சிங்
ஹமீர்பூர்: ஒரு வேளை உ.பி சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவானால் அதைத் தடுக்க காங்கிரஸை ஆதரிக்கத் தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
இதுகுறித்து ஹமீர்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், சமாஜ்வாடிக் கட்சிக்கு ஆதரவாக இன்று அலை வீசிக் கொண்டிருக்கிறது. அடுத்த அரசை அமைக்கப் போவது எங்களது கட்சிதான். ஒருவேளை பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால் அதை எங்களது கட்சி தடுக்கும். அதற்காக காங்கிரஸை நாங்கள் ஆதரிப்போம். மதவாத சக்திகளிடம் ஆட்சி போக விட மாட்டோம் என்றார் முலாயம் சிங்.
முலாயமின் இந்த திடீர் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அவர் காங்கிரஸுடன் கை கோர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கவனத்துடன் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா செளத்ரி கூறுகையில், இப்போது இந்த கேள்வியே தேவையில்லாதது. பொறுத்திருந்து பார்ப்போம் என்பது மட்டுமே இப்போதைக்கு எங்களது பதில். காங்கிரஸ் சமாஜ்வாடி இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்படவில்லை. மேலும் தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்து எங்களிடம் இப்போது எந்த சிந்தனையும் இல்லை. தேர்தலும் முழுமையாக முடியவில்லை.
மேலும் இந்தக் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கருத்துக் கூறும் அதிகாரமும் எனக்கு இல்லை.
முலாயம் சிங்கின் பேச்சைப் பார்க்கும்போது அவருக்கு தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பதை அவரே ஒத்துக் கொள்வது போலத்தான் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications