மூன்றாவது அணியை அமைக்கும் நேரம் வந்து விட்டது: ஒரிசா முதல்வர் நவீன்
புவனேஸ்வர்: தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று பிஜு ஜனதா தளத் தலைவரும் ஒரிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முழுமையாக ஊழல்மயமாகிவிட்டது. மறுபுறத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதவாதக் கறைபடிந்த அணியாக இருக்கிறது.
இரண்டு கூட்டணிகளைத் தவிர்த்து மதச்சார்பற்ற, வெளிப்படைத் தன்மை கொண்ட ஒரு தேசிய அளவிலான அணி அமைக்க வேண்டியது அவசியம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் தேசிய அளவிலான பயங்கரவாத ஒழிப்பு மையம் மாநில உரிமைகளைப் பறிப்பதாகும்.
இதனால் இந்த அமைப்பை எதிர்க்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன் என்றார் அவர்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் ஏற்கெனவே பிஜூ ஜனதா தளம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications