சென்னை அருகே கிணற்றுக்குள் 5 பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது
திருவள்ளூர்: சென்னை அருகே செங்குன்றத்தையடுத்துள்ள எடப்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்டது எடப்பாளையம். அங்குள்ள பசும்பொன் நகரில் கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சக்திவாயந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக சோழாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட கிணற்றுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.
இது குறித்து கிணற்றின் உரிமையாளர் கோயில்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிணற்றுக்குள் இருந்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.