திமுகவை விட்டு நீக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களை சேர்த்தால் ஏற்க மாட்டோம்-மேலிடம்
சென்னை: கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானவர்கள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் அளிக்கும் புதிய உறுப்பினர்கள் பட்டியலை தலைமைக் கழகம் பதிவு செய்யாது என்று திமுக மேலிடம் அறிவித்துள்ளது.
திமுகவில் தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு அறிவுரைகளை, அறிவுறுத்தல்களை திமுக தலைமைக் கழகம் தொடர்ந்து பத்திரிகைகள் வாயிலாக அறிவித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:
தி.மு.க.வின் 14-வது தேர்தலுக்கு முன் சேர்க்கப்படும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் படிவங்களை பெற்று உறுப்பினர்களை சேர்ப்பதில், தலைமைக் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ளவர்கள் ஈடுபடுவதை தலைமைக் கழகம் ஏற்காது. அவர்களால் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களை தலைமைக்கழகம் பதிவு செய்யாது என்பதும் அறிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.