தூத்துக்குடியில் திருமா கட்சி நிர்வாகி அடித்துக் கொலை: பதற்றம், போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி: மெஞ்ஞானபுரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானப்புரம் அருகே உள்ள ஆத்திக்காடு கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரமுத்து. அவரது மகன் சங்கர். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். சங்கர் மெஞ்ஞானப்புரம் அருகே அன்பின் நகரம் பக்கமுள்ள கருமேனி ஆற்றில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவருக்கும், சிலருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு சுமார் 10 மாட்டு வண்டிகளுடன் கருமேணி ஆற்றில் மணல் அள்ளுவதற்காக சங்கர் சென்றார். அப்போது மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பின் நகரம் பகுதியைச் சேர்ந்த சிலர் சங்கர் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் சங்கருக்கும், அன்பின்நகரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தங்களை தடுத்து நிறுத்தியவர்களுடன் சங்கர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அன்பின்நகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உருட்டு கட்டையால் சங்கரை சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து உடன் சென்றவர்கள், அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications