என் இனத்தை அழித்த காங்.கை எல்லா மாநிலங்களிலும் அழிப்பேன்-மும்பையில் சீமான் ஆவேசம்
மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி, சயான் கோல்லிவாடா ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.
தாராவி 90 அடிச் சாலையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசுகையில்,
காங்கிரஸூக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். காரணம், இலங்கையில் ராஜபக்ச அரசு தமிழர்களை அழித்தொழிக்க நடத்திய இனப் படுகொலைப் போருக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுத்தும், ஆலோசனை வழங்கியும், ராடார் அளித்தும், நிதியுதவி, சிங்கள படையினருக்குப் பயிற்சி என்று எல்லா வகையிலும் உதவியுள்ளது.
என் இனத்தை வேரோடு அழிக்கத் துணைபோன காங்கிரஸ் கட்சியை என்னுயிர் தமிழ்ச் சொந்தங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்க வேண்டும்.
உண்மையான ஒவ்வொரு தமிழனும் இலங்கையில் தன் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து பழி தீர்க்க வேண்டும். இதற்கு மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தமிழனாவது வாக்களித்தால் அவனது பிறப்பை சந்தேகிக்க வேண்டும்.
தமிழினப் பகைவனான இராஜபக்சாவுடன் சேர்ந்துக்கொண்டு ஒன்றேமுக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் அரசை மத்தியில் இருந்து மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மராட்டியம், குஜராத் என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சென்று பரப்புரை செய்து தோற்கடிக்க முயற்சிப்பேன். இது சத்தியம்.
எந்த சின்னத்திற்காக சீமான் வாக்குக் கேட்கிறான் என்பதல்ல, எந்த எண்ணத்தின் அடிப்படையில் கேட்கிறான் என்பதே முக்கியம். என் இனத்தை அழித்தவனை அழிக்க மராட்டிய மண்ணில் வாழும் என் சொந்தங்களின் வாக்குப் பலத்தை சரியான திசையில் பயன்படுத்தியே காங்கிரஸ் கட்சியை வீழ்த்த இந்த பரப்புரையை செய்கிறேன் என்றார்.
தாராவியில் உள்ள 178வது வார்டில், பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார்.
அதே போல, இதே பகுதியில் மற்றொரு வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தாராவி பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்த பிறகு, சயான் கொல்லிவாடா பகுதியில் உள்ள 168 வது வார்டில் பா.ஜ.க. கட்சி சார்பில் போட்டியிடும் தமிழரான கேப்டன் இரா.தமிழ்ச் செல்வனை ஆதரித்து சீமான் பரப்புரை செய்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, போரை நிறுத்துமாறு பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டவர் தமிழ்ச் செல்வன் ஆவார்.
சீமானுடன் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ஊடகவியலாளருமான கா.அய்யநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசன், கலை பண்பாட்டுப் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பால முரளி வர்மா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலநந்து கொண்டனர்.