+1 மாணவர் தற்கொலை: பள்ளி இழுத்து மூடல்- தலைமறைவான தாளாளருக்கு வலைவீச்சு
திருப்பூர்: திருப்பூரில் மாணவர் அனுஜ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆர்.கே.ஆர். பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி ஆசிரியரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள பள்ளியின் தாளாளர் ஆர்.கே.ராமசாமியை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையன்கோட்டை முதலியார் தோட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் அனுஜ்(16). உடுமலைப்பேட்டை ஏரிபாளையத்தில் உள்ள ஆர்.கே.ஆர். பள்ளியில் +1 படித்து வந்தார். இவர் கடந்த 15ம் தேதி பள்ளி விடுதியில் உள்ள நோயாளிகள் அறையின் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது தற்கொலை முடிவுக்கு பொருளாதார பாடப்பிரிவு ஆசிரியர் மகேஸ்வரன் தான் காரணம் என்று அவர் 3 கடிதங்களை எழுதி வைத்துள்ளார். இதனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அனுஜின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் மகேஸ்வரன், தாளாளர் ஆர்.கே.ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மாணவர் அனுஜை தற்கொலைக்கு தூண்டியதாக பொருளாதார ஆசிரியர் மகேஸ்வரன்(27) கைது செய்யப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்தில் இப்பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் அடுத்தடுத்து பலியானதால் கடந்த 15ம் தேதி முதல் இப்பள்ளி மூடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர் ஆர்.கே.ராமசாமி தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.