திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் பெண்ணுடன் பட்டர் உல்லாசம்: நடவடிக்கைக்கு உத்தரவு
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக இந்து பக்த சபை சார்பில் மதுரை கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நட்ததி அறிக்கை சமர்பிக்குமாறு அவர் தனித் துறை ஆட்சியர் ஒருவருக்கு உத்தரவிட்டார். அவரும் பக்தர் போன்று அந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று ரகசியமாக விசாரணை நடத்தினார்.
அப்போது கோயிலில் உள்ள பெண் தெய்வ சன்னதியில் பட்டர் ஒருவரும், ஒரு பெண்ணும் உல்லாசமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரி சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பட்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயில் இணை ஆணையருக்கு கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய தனித்துறை ஆட்சியர் கூறியதாவது,
பாலியல் புகார் குறித்து விசாரிக்க பக்தரைப் போன்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பலமுறை சென்று விசாரித்தேன். கோயில் வளாகத்திலுள்ள கடைகள், திருப்பரங்குன்றத்திலுள்ள இந்து சமய மன்ற நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரித்தேன்.
பட்டர் ஒருவரும் கோயிலில் பணியாற்றும் பெண் ஒருவரும் சுவாமி சன்னதி அருகே உள்ள ஒரு பெண் தெய்வ சன்னதியில் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளனர். அதைக் கண்டு மற்ற பட்டர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அந்த பட்டர் தனது லீலைகளை தொடர்ந்து நடத்தியுள்ளார். இதனால் வெறுப்படைந்த மற்ற பட்டர்கள் அவருடன் பேசுவதை குறைத்துக் கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த அறநிலையத்துறை நிர்வாகம் அந்த பெண்ணை வேறு இடத்திற்கு மாற்றியது. இது குறித்த விசாரணை நடப்பதை அறிந்ததும் அந்த பட்டர் கடந்த சில நாட்களாகவே கோயிலுக்கு வரவில்லை. இந்த விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
தனித்துறை ஆட்சியரின் அறிக்கையின்படி அந்த பட்டர் மீது 1 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் இணை ஆணையருக்கு கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன் கூறுகையில், தெய்வப்பணியில் ஈடுபடுகிறவர்களிலும் கூட போலிகள் உள்ளனர். அந்த பட்டர் செய்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விசாரணையின்றி அவரை தண்டிக்க வேண்டும்.
கோயில்களில் எந்த போர்வையிலும் அயோக்கியர்கள் நுழைந்தால் அவர்களை வேரோடு அகற்ற வேணடும். கோயிலில் விரைவில் சுத்தி பூஜை செய்ய வேண்டும். ஆலயங்களின் புனிதத் தன்மையைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் பெண்ணுடன் படு ஆபாசமாகநடந்து கொண்டு ஒரு பூசாரி சிக்கினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றததில் பட்டர் ஒருவர் அசிங்கமாக நடந்து கொண்ட செயல் பக்தர்களை அதிர வைத்துள்ளது.