சசி சித்தப்பா மருமகன் ராவணனை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க மனு
சென்னை: சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர் ராவணனை மற்றொரு மணல் குவாரி விவகாரம் தொடர்பாக காவலில் விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மணல்குவாரி எடுத்துத் தருவதாகக் கூறி ரூ2 கோடி மோசடி செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏற்கெனவே புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த புவனேசனும் மணல்குவாரி மோசடி தொடர்பாக ராவணன் மீது புகார் கொடுத்துள்ளார்.
புவனேசனின் புகார் மனுவில், மணல் குவாரியை குத்தகை எடுக்கவேண்டும் என்று செங்கோட்டையன் உதவியாளர் ஆறுமுகத்திடம் கூறினேன். அவர் என்னை ராவணனிடம் அழைத்துச் சென்றார். அப்போது ராவணன் என்னிடம் ரூ.5 கோடி கேட்டார். அப்போது நான் அட்வான்சாக ராவணனிடம் ரூ.2 கோடி கொடுத்தேன். அதை அவர் மோசடி செய்து விட்டார் என்று கூறியிருந்தார்..
இப்புகாரின் பேரில் சிறையில் உள்ள ராவணனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். மேலும் புவனேசன் கொடுத்த புகார் பற்றி ராவணனிடம் போலீஸ் காவலில் விசாரிக்கவும் முடிவு செய்தனர்.
இதன்படி ராவணனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
இதனால் அன்றைய தினம் ராவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications