ஏப்ரல் வரை மின்வெட்டு நீங்க வாய்ப்பில்லை என்கிறார்கள் மின்வாரியத்தினர்
சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு மின்வெட்டு நீங்கும் நிலை இல்லை என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிலை ஏப்ரல் வரை தொடரும் என்றும் அதன் பிறகே படிப்படியாக நிலைமை சரியாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் அனைத்துமே ஏப்ரல் மாத வாக்கில்தான் முடிவடையும் என்றும் அதன் பிறகே மின் உற்பத்தி தொடங்கி நிலைமை சகஜமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மே மாதத்திலிருந்து மின்வெட்டு அளவு கணிசமாக குறைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் 3000 மெகாவாட்டுக்கும் அதிகமான அளவில் மின்பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக சென்னையைத் தவிர தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 8 மணி நேர மின்வெட்டு அமலாகி வருகிறது. பல பகுதிகளில் இது 8 மணி நேரத்தையும் தாண்டி உள்ளது. சில இடங்களில் 10 மணி நேரம் வரையிலும் கூட மின்சாரத்தைத் துண்டிக்கிறார்கள்.
மின்வெட்டு காரணமாக சாதாரண மக்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் முடங்கிப் போயுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அவல நிலைக்கு மத்திய அரசுதான் முக்கியக் காரணம் என்று தமிழக மின்வாரியத் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
வெளி மாநிலங்கள் சில மின்சாரம் தர ஒப்புக்கொண்டபோதும், அந்த மின்சாரத்தை முழுமையாக கொண்டுவரும் அளவுக்கு மின் தொடர் வடத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வில்லை. இதனால் மின்சாரத்தைக் கொண்டுவர முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தபோதும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் தருவதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, இப்போதுள்ள மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படவில்லை. கோடைக்காலம் தொடங்க உள்ளது என்பதால் உற்பத்தி ஓரளவு குறையலாம்.
இந்த பாதிப்பு ஏப்ரல் மாதம் வரைதான் இருக்கும். அதற்குள், மேட்டூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு விடும். அதிலிருந்து 450 மெகா வாட் முதல் 500 மெகா வாட் வரை மின்சாரம் பயன்பாட்டுக்கு கிடைக்கும். இதைக் கொண்டு 5 முதல் 10 சதவீதம் வரை மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
எனவே, மே மாதம் முதல் பிற மாவட்டங்களில் நிலவி வரும் மின்வெட்டு அளவு ஓரளவு குறையும். அதன் பிறகு, நெய்வேலி அனல் மின் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி உள்ளிட்ட 3 பகுதிகளிலும் நிறுவப்பட்டு வரும் புதிய அனல் மின் திட்டங்கள் படிப்படியாக செயல்படத் தொடங்கிவிடும். அவற்றாலும் மின்வெட்டு குறைய வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள்.
எனவே, சென்னை தவிர்த்த தமிழக மக்களின் தவிப்பு, ஏப்ரல், மே மாதம் வரை அடங்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications