பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா - தமிழில் கேள்விகள் - தொடங்கியது விசாரணை!

முதல்வர் ஜெயலலிதாவின் 'முன்னாள் நண்பர்களான' சசிகலா, இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று கோரி சசிகலா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தனி நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே சொத்து சேர்ப்பு வழக்கு இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார் ஜூனையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அப்போது சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார்.
சசிகலா அளித்த பதிலை அவர் நீதிபதியிடம் ஆங்கிலத்தில் திரும்ப சொன்னார். தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடந்து வருகிறது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரிடமும் இன்று மட்டும் 400 கேள்விகள் வரை கேட்டு விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கேள்விகள் அதிகமிருந்தால், நாளை மறுநாளும் விசாரணை தொடரும்.












Click it and Unblock the Notifications