பெரியார் பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுதாத 3 மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் அளித்தது கண்டு
சேலம்: சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் 3 பேருக்கு தேர்வு எழுதாமலே சான்றிதழ் அளித்தது உட்பட பல்கலைக் கழகத்தில் நடந்த பல திடுக்கிடும் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 74 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக் கழகத்தில் 2,000 மாணவ, மாணவியரும், சார்ப்பு கல்லூரிகளில் சுமார் 40,000 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மாணவ, மாணவியரின் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் பல்வேறு முறைகேடுகள், பணம் பெற்று கொண்டு தகுதியில்லாதவர்களை போராசிரியர்களாக நியமிப்பது உட்பட பல்வேறு மோசடிகள் நடப்பதாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை துணை சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெரியார் பல்கலைக் கழகத்துக்கு சென்றனர். பல்கலை பதிவாளர் அறையில் இருந்த பதிவாளர் அங்கமுத்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரினஸ் தன்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரித்தனர்.
அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விபரம், தேர்வு விடைத்தாள்கள், விடைத்தாள்கள் திருத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உட்பட்டவை அடங்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
இதில் சந்தேகத்திற்கு இடமான 400க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை கட்டி, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, நேற்று ஆய்வு நடத்தினர். இதில் பல மாணவ, மாணவியரின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரிய வந்தது.
மோசடிகளின் பட்டியல்:
பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெறாத பல மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருந்ததை லஞ்சத் துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் உள்ளிட்ட முறைகள் மூலம் அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டிருந்தது.
பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்ற 2 மாணவிகள், ஒரு மாணவர் ஆகியோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கவோ, தேர்வுக்குரிய கட்டணம் செலுத்தவோ, தேர்வு எழுதவோ இல்லை. ஆனால் அவர்கள் 3 பேரும் பல்கலைக் கழக தேர்வில் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது தெரிய வந்தது.
இது போன்ற மோசடி பணிகளில் ஈடுபட தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறியதாவது,
பல்கலைக் கழகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், பல மோசடிகள் நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது குறித்து உயரதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த பிறகு, மீண்டும் பல்கலைக் கழகத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில் மோசடியில் ஈடுபட்டவர்களை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications