டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை, வீட்டு முன் எறிந்து சென்ற நபர் - போலீசார் விசாரணை
சென்னை: வேளச்சேரியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற நகைகளை, அதே வீ்ட்டின் முன் எறியப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகைகளை எறிந்து சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி டான்சி நகரை சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி டாக்டர் பாக்கியலட்சுமி உடன் சேர்ந்து அதே பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10ம் தேதி பாக்கியலட்சுமியும், மகளும் வெளியூர் புறப்பட்டு சென்றார். 13ம் தேதி வீடு திரும்பியனர். அப்போது வீட்டு பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் விசாரித்து வந்தனர். டாக்டர் கோபால கிருஷ்ணனின் வீ்ட்டில் வேலை செய்த வேலைக்காரி, மருத்துவமனை நர்சுகள், ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் டாக்டரின் வீட்டு வாசலில் கருப்பு நில பாலீதின் பை ஒன்று கிடந்தது. கோபாலகிருஷ்ணன் பையை எடுத்து திறந்து பார்த்த போது, அதில் தனது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 140 பவுன் நகைகள் இருந்தது.
அதில் அதிர்ச்சியடைந்த டாக்டர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அடையாறு துணை கமிஷனர் (பொறுப்பு) பிரபாகரன், கிண்டி உதவி கமிஷனர் மாணிக்கவேல், வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டு முன் எறிந்து சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications