64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு இலவச கல்யாணம் நடத்தி வைத்தார் ஜெ.

ஜெயலலிதாவின் மணி விழா அதாவது 60வது பிறந்த நாளிலிருந்து ஆண்டுதோறும் ஏழை ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த ஆண்டு 64 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது.
பிப்ரவரி 24ம் தேதி முதல்வரின் 64வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி இன்று இந்த இலவசத் திருமணங்கள் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 64 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமணங்களை ஜெயலலிதா நடத்தி வைத்தார். மணமகன் கையில் அவர் தாலியை எடுத்துக்கொடுக்க, அவர்கள் கெட்டிமேளம் முழங்க மணமகள் கழுத்தில் தாலியை கட்டினார்கள்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏழை திருமண ஜோடிகளை தேர்ந்தெடுத்து வரவழைக்கப்பட்டிருந்தனர். அனைவரும் அமரும் வகையில் பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மணமகனுக்கு பட்டு வேட்டி-சட்டை, மணமகளுக்கு பட்டு சேலை, 4 கிராம் தங்க தாலி ஆகியவை வழங்கப்பட்டது. இவை தவிர முதல்வரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் குடும்பம் நடத்துவதற்கு தேவையான 64 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காக ஜெயலலிதா இன்று காலை 10.45 மணிக்கு மேடைக்கு வருகைத் தந்தார். அப்போது தங்கதாரகையே வருக! வருக!! தமிழ் மண்ணின் தேவதையே வருக! வருக!! என்ற பாடல் இசைக்கப்பட்டது.
திருமண மேடையில் முதல்வருக்கு வலதுபுறம் 32 ஜோடிகளும், இடதுபுறம் 32 ஜோடிகளுமாக பிரிந்து அமர்ந்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதா முதலில் 64 மணமகன்களுக்கும் மங்கல நாணை எடுத்துக் கொடுத்தார். பின்னர் இவர்களின் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமையேற்று நடத்தி வைத்தார்.
மணமக்கள் அனைவரும் எழுந்து நிற்குமாறு, அவரவர் மணமகளுக்கு தாலி அணிவிக்குமாறும் முதல்வர் அறிவிக்க ஒரே நேரத்தில் 64 மணமகன்களும் தாலி அணிவித்தனர். பின்னர் மணமக்களை மாலைகள் மாற்றிக் கொள்ளுமாறு முதல்வர் அறிவித்து அவரே மணமக்கள் வாழ்க என்று ஒலிபெருக்கி மூலம் வாழ்த்து சொல்லி அட்சதை தூவி அனைவரையும் வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications