டெல்லியிலிருந்து கோவைக்கு லாட்டரிச் சீட்டு கடத்தல்-மார்ட்டின் மறுபடியும் கைது
கோவை: விமானம் மூலம் லாட்டரிச் சீட்டுக்களைக் கடத்தியதாக லாட்டரி அதிபரி மார்ட்டினை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜனவரி 13ம் தேதி கோவை பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஜீவானந்தத்திற்கு ஒரு தகவல் வந்தது. அதில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஒரு கண்டெனரில் கோவை விமான நிலையத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் ஒரு குறிப்பிட்ட கண்டெய்னரை சோதனையிட்டனர். அதில் லாட்டரிச் சீட்டுக்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். டெல்லியிலிருந்து அநத் லாட்டரிச் சீட்டுக்களை ஆனந்த் என்பவர் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்த்தைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நேற்று ஆனந்த்தை பீளமேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வைத்துப் பிடித்தனர்.
பின்னர் ஆனந்த்தை போலீஸார் விசாரித்தபோது அவர் மார்ட்டினை கை காட்டி விட்டதாக கூறப்படுகிறது. மார்ட்டின் ஏற்கனவே ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி கோவை சிறையில்தான் அடைபட்டுள்ளார். இந்த நிலையில் லாட்டரிச் சீட்டுக்களை கடத்திய வழக்கில் நேற்று அவரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும் மார்ட்டினின் மச்சான் ஜான் பிரிட்டோவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். மார்ட்டினின் நண்பர் கணேசன் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.