திருச்சி சிறையில் நடராஜன் அடைப்பு-மார்ச். 2 வரை சிறைக் காவல்

தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் நடராஜன் கைது செய்யப்பட்டார்.
"விளார் கிராமத்தில் பைபாஸ் சாலை அருகே தனக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுரஅடி நிலத்தை சசிகலா கணவர் நடராஜன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அபகரித்து கொட்டகை போட்டு உள்ளார்" என்பது ராமலிங்கம் கொடுத்த புகார்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.
திருச்சி சிறையில்..
சென்னை பெசன்ட்நகர் வீட்டில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நடராஜனை இன்று அதிகாலை தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக காவல் நிலையத்தில் டிஐஜி அமல்ராஜ் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் சசிகலா கணவர் நடராஜன் மீது நிலஅபகரிப்பு வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் மாலதி முன்பு ஆஜர் செய்தனர்.
நடராஜனை மார்ச் 2-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இருவர் கைது
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மாலதி நடராஜனை மார்ச் 2ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நடராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் நடராஜனின் அண்ணன் சாமிநாதன், அக்காள் மகன் சின்னையா என்கிற வெங்கடேசன், கூட்டாளிகள் சுரேஷ், இளவழகன், குபேந்திரன், மாரிமுத்து ஆகிய 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சின்னையா என்கிற வெங்கடேசனையும், கூட்டாளி குபேந்திரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications