அதிமுகவினர் ஒற்றுமை, அன்பைக் கடைப்பிடித்தால் 40 தொகுதிகளும் வெற்றி நமக்கே-ஜெ.

சென்னையில் இன்று 64 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் ஜெயலலிதா. பின்னர் திருமண விழாவில் அவர் பேசியதாவது:
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே, என்ற வரிகளை மனதில் வைத்து நீங்கள் ஒற்றுமையுடன் இருந்தால் அது வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும்.
ஒரு சமயம் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் மிகுந்த ஓர் இடத்தை பார்வையிட்டு சென்று கொண்டிருந்தனர். பயண வழிகாட்டி ஒருவர், ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களிடம் விரிவாக எடுத்துக் கூறினார். அப்போது, மிக உயரமான பெரிய மரங்கள் நெருக்கமாக அடர்த்தியாக வளர்ந்திருப்பதை சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்புடன் நின்றார்கள். அது குறித்து வழிகாட்டியிடம் வினவினர்.
அதற்கு அந்த வழிகாட்டி, வானம் தொடும் வரை வளரும் இம்மரங்கள் பெரு மழை மற்றும் சூறாவளிக் காற்று அடித்தாலும் விழுந்து போகாமல் அப்படியே இருக்கும். இந்த மரங்களின் வேர்கள் பூமியில் ஆழமாகக் கூட செல்வதில்லை; சில அடி தூரம் தான் செல்கின்றன என்று கூறினார்.
அது எப்படி முடியும்? இவ்வளவு பெரிய உயரமான மரத்தை அந்த சிறிய வேர்கள் எப்படி தாங்கிக் கொள்ளும்? சூறாவளிக் காற்று அடித்தால் நிச்சயமாக மரம் வேரோடு சாய்ந்து விடும் என்று ஒரு சுற்றுலாப் பயணி கூறினார்.
அதற்கு அந்த வழிகாட்டி இந்த மரம் தனித்தனியே வளருவது இல்லை. அருகருகே வளர்ந்து ஒரு தோப்பை போன்று காட்சி தருகின்றது. ஒவ்வொரு மரமும் பார்ப்பதற்கு தனி மரமாக தெரிந்தாலும் அதன் வேர்கள் ஒன்றுடன் ஒன்று, பின்னிப் பிணைந்து இருக்கின்றன. அதனால் சூறாவளிக் காற்று வீசினாலும் ஒவ்வொரு மரத்தின் வேர்களும் தன் அருகில் இருக்கும் மரங்களின் வேர்களை அணைத்து இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றன என்று கூறினார்.
இந்த இயற்கையின் படைப்பாற்றலை நீங்கள், உங்கள் இல்லங்களில் பின்பற்றினால்; ஒற்றுமையை நிலைநாட்டினால்; அன்புடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்; சோதனைகள் சாதனைகளாகும்; தடைக் கற்கள் படிக்கற்களாகும்; உங்களுடைய வாழ்க்கை அமைதியானதாக, மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இந்த ஒற்றுமையை, இந்த அன்பினை உங்களுடைய பொது வாழ்க்கையில் அரசியல் வாழ்க்கையில் கடைபிடித்து மக்கள் பணியாற்றினால்; வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்பதைத் தெரிவித்து; அதற்கான பணியினை நீங்கள் இப்பொழுதே துவக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு; முதியோருக்கு தேவையானவற்றை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு செய்து கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications