திருவனந்தபுரம் பத்மநாபா கோவிலில் தொடர்கிறது பொக்கிஷம் மதிப்பிடும் பணி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பாதாள நிலவறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி 2-வது நாளாக நடைபெற்றது. பொக்கிஷம் மதிப்பிடும் பணி நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் கோயில் நகைகளை உச்சநீதிமன்றம் நியமித்த 2 குழுக்கள் நேற்று முதல் மதிப்பீடு செய்து வருகின்றன.
பரிகார பூஜைகளுடன் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு இப்பணி தொடங்கியது.
முதலில் எப் அறை திறக்கப்பட்டது. நரசிம்ம மூர்த்தி தெய்வத்தின் பூஜை பொருட்கள், ஆபரணங்கள், தங்க கிரீடம் ஆகியவற்றை மதிப்பிட்டனர்.
பின்னர் தூபபெட்டிகள், நீராஞ்சன தட்டுகள் ஆகியவற்றை மதிப்பிடத் தொடங்கினர். இவற்றை மதிப்பீடு செய்ய பல மணிநேரமானது. மொத்தம் 20 ஆபரணங்களின் மதிப்பீடுதான் முதல்நாளில் மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கோயில் நகைகளை மதிப்பிடும் பணி நடைபெற்றது.