மேற்கு வங்க பேரணியில் தாக்குதல்: முன்னாள் சிபிஎம் எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் பலி
பர்த்வான்: மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியின்போது நடந்த தாக்குதலில் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் தா உள்பட 2 பேர் பலியாகினர்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரும் 28ம் தேதி நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரித்து இன்று காலை பேரணி நடத்தினர். அப்போது தியோன்திகி பகுதியில் சிபிஎம் ஆதரவாளர்களை நேற்று திரிணாமூல் காங்கிரஸ் ஆட்கள் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
பேரணி தீவான்திகி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய சிலர் அங்கு வந்து பேரணியில் சென்றவர்களைத் தாக்கினர். இதில் முன்னாள் சிபிஎம் எம்.எல்.ஏ. பிரதீப் தா உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல் ஆளுங்கட்சியினர் தான் நடத்தியுள்ளனர் என்றும், உடனே அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் சிபிஎம் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட எஸ்பி மிர்ஸா கூறுகையில், முன்னால் எம்.எல்.ஏ. தா பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே இறந்துவிட்டார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கமல் காயன் கொல்கத்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இந்நிலையில் பேரணியில் வந்த சிபிஎம் ஆதரவாளர்கள் தீவான்திகி பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸாரைத் தாக்கியதால் தான் அவர்கள் தற்காப்புக்காக திருப்பித் தாக்கினர் என்று ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications