2ஜியில் ப.சிதம்பரத்தை விடுவித்ததை எதிர்த்து சாமி வழக்கு!
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை என்ற சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
2ஜி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியான ஆ. ராசா செய்த குற்றத்துக்கு இணையான குற்றம் செய்தவர் ப.சிதம்பரம் என்பது சாமியின் வாதம்.
இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தின் முன்பு தாம் தாக்கல் செய்த ஆவணங்களே போதுமானவை என்றும் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரங்கள் இருப்பதாகவும் சாமி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
2ஜி ஊழலில் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உண்டு என்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறையை அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என்றும் சுப்பிரமணிய சாமி கூறிவந்தார்.
இதனால் ப.சிதம்பரத்தை 2ஜி ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மனுவும் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்தை வழக்கில் சேர்ப்பது குறித்து விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து சிதம்பரத்தை விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 4-ந் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாமி மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்திலேயே முறையீடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications