கொள்ளையர் குறித்து போலீஸாருக்குத் துப்பு கொடுத்தது திருந்தி வாழும் ரவுடியின் மகள்!
சென்னை: வங்கிக் கொள்ளையர்கள் பதுங்கியிருந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது முன்னாள் ரவுடி ஒருவரின் மகள் என்று தெரிய வந்துள்ளது.
வேளச்சேரி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில்தான் இந்தக் கொள்ளையர்கள் கடந்த 3 மாதமாக தங்கியிருந்தனர்.
மொத்தம் 3 மாடிகளைக் கொண்ட இந்த அபார்ட்மென்ட்டில் கீழ்த்தளத்தில் இந்த வீடு உள்ளது. ரூ.20,000 அட்வான்ஸ் மற்றும் மாத வாடகை ரூ. 5000 கொடுத்துத் தங்கியிருந்தனர்.
தங்களைக் கல்லூரி மாணவர்கள் என்று இவர்கள் கூறியுள்ளனர். மாணவர்கள் என்பதால் வீட்டை வாடகைக்குக் கொடுத்துள்ளார் இந்த வீட்டின் உரிமையாளர். வீட்டு உரிமையாளர் ஒரு முன்னாள் ரவுடி ஆவார். தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறார்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டதும் அதைப் பார்த்த வீட்டு உரிமையாளரின் மகள் அதிர்ச்சி அடைந்தார். தங்களது வீட்டில்தான் கொள்ளையர்கள் தங்கியிருப்பதை அறிந்த அவர் உடனடியாக போலீஸார் கொடுத்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுதான் போலீஸாருக்கு பெரும் உதவியாக அமைந்தது.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோதுதான் அவர்கள் துப்பாக்கியால் சுடவே போலீஸார் திருப்பிச் சுட்டனர். இதில் ஐந்து பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications