நடராஜன்-திவாகரனின் 11 ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அதிரடி
சென்னை: அதிமுகவிலிருந்து சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் முதல்வரும் கட்சியின் பொது செயலாளருமான ஜெயலலிதா. இவர்கள் அனைவரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்க்கண்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
துரை. குபேந்திரன், திருவாரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்.
அ. சுஜய், திருவாரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர்.
எம். தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர்.
எம்.டி. ராஜேந்திரன், ரிஷியூர் ஊராட்சிக் கழகச் செயலாளர்.
எஸ். கிருஷ்ணமேனன், ரிஷியூர் ஊராட்சி மன்றத் தலைவர்.
எஸ். ராசுப்பிள்ளை, மன்னார்குடி நகரமன்ற 24-வது வார்டு உறுப்பினர்.
எஸ். பக்கிரிசாமி, மன்னார்குடி நகர 24-வது வார்டு கழகச் செயலாளர்.
மருதகணேசன்- ரிஷியூர், காந்தி- நீடாமங்கலம். வைத்தியநாதன்- ரிஷியூர், வீர. சிவசங்கர்- நீடாமங்கலம் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதில் துரை. குபேந்திரன் சமீபத்தில் நிலமோசடி வழக்கில் கைதான நடராஜனுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணமேனன் ரிஷியூரில் ஒரு பெண்ணின் வீட்டை இடித்த வழக்கில் திவாகரனுடன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏராளமான அதிமுக எம்எல்ஏக்களும் நடராஜன், திவாகரன் ஆதரவால் சீட் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திவாகரனுடன் தி.மு.கவினர் திடீர் சந்திப்பு:
இந் நிலையில் திருத்துறைப்பூண்டியில் சரவணன் என்பவரைக் கடத்தி, பணம் பறித்த வழக்கில், சசிகலா தம்பி திவாகரனின் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராக வந்த திவாகரனை திமுகவினர் சந்தித்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த திருத்துறைப்பூண்டி தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் திராவிட மணி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான, தி.மு.கவினர், திவாகரனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.