புதுச்சேரியின் முடிசூடா மன்னன்.. 5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி! மே 13ல் பதவியேற்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் மே 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரங்கசாமி. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், இன்று ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

புதுச்சேரி ரிசல்ட்
புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை உறுதி செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, எல்ஜேகே 1 இடங்களில் வெற்றி பெற்றன.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளதால் மீண்டும் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ரங்கசாமியும், பாஜக தரப்பில் நமச்சிவாயமும் தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சரவையில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
ரங்கசாமி
இந்தச் சூழலில், முறைப்படி புதிய அரசு அமைய ஏதுவாக ரங்கசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஆளுநர் கைலாஷ்நாதனிடம் கடிதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், கூட்டணித் தலைவராக ரங்கசாமி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சராக மன்சுக் மாண்டவியா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் எல்.ஜே.கே ஆகிய கட்சிகள் ரங்கசாமிக்கு தங்கள் ஆதரவுக் கடிதங்களை வழங்கின. பின்னர், ரங்கசாமி கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநர் மாளிகை சென்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்தார்.
மே 13ல் பதவியேற்பு
ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்த ரங்கசாமி, புதிய ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்தக் கடிதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநரின் அழைப்பை ஏற்று, மே 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
மே 13-ம் தேதி நான் மட்டும் முதல்கட்டமாக முதலமைச்சராகப் பதவியேற்கிறேன். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவியேற்பார்கள் என ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக 5-வது முறையாக ரங்கசாமி சாதனை படைக்க உள்ளார்.
5வது முறையாக முதல்வர்
என். ரங்கசாமி முதல் முறையாக 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் ஆனார். 2006ல் 2வது முறையாக முதல்வர் ஆனார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கிய பிறகு 2011ல் மீண்டும் முதலமைச்சர் ஆனார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 4வது முறையாக புதுச்சேரி முதல்வர் ஆனார். இந்நிலையில், தற்போது 5வது முறையாக புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி.












Click it and Unblock the Notifications