விவசாயிகளை நக்சலாக்கி சுட்டுக் கொல்லுகிறது மாயாவதி அரசு: ராகுல்
காசியாபாத்( உ.பி): உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி மாயாவதி அரசு படுகொலை செய்வதாக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காசியாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடினால் அவர்கள் நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தப்படுகிறது.
நக்சலைட்டுகளை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் அவர்களின் மீது துப்பாக்கி குண்டு மழைகள் பொழியப்படுகின்றன.
கடந்த ஆண்டு நொய்டா அருகே உள்ள பாட்டா பர்சாவுல் கிராமத்தில் மாயாவதி அரசால் கைப்பற்றப்பட்ட தங்களின் நிலத்துக்கு அதிக நட்ட ஈடு கேட்டு விவசாயிகள் போராடினர். ஆனால் இப்போராட்டத்தை மாயாவதி அரசு கடுமையாக ஒடுக்கியது.
தங்களது தேவைக்காக உரிமைக் குரலை விவசாயிகள் எழுப்பியது ஒரு குற்றமா?
மாயாவதி அரசின் நடவடிக்கையால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி அரசு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு எதனையும் செய்யவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 22 ஆண்டுகளில் ஆட்சி நடத்திய அனைத்து முதல்வர்களும் இந்த மாநிலத்தையே நாசப்படுத்தி சூறையாடிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலைமையை சீரமைக்க முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications