குடும்பத் தகராறு: 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இடுகாட்டில் படுக்க வைத்த தந்தைக்கு வலை
வாணியாம்பாடி: வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்களை சுடுகாட்டில் படுக்க வைத்துவிட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். கட்டிட மேஸ்திரி. அவருடைய மனைவி மலர். அவர்களுக்கு ஜெயலட்சுமி (10) என்ற மகளும், நாகராஜ் (7), தேவராஜ் (3) என்ற மகன்களும் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலர் கணவனிடம் கோபித்துக் கொணடு தான் மட்டும் ரெட்டியூரில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் 3 குழந்தைகளையும் வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள கடையில் குளிர்பானம் வாங்கி அதில் பூச்சி மருந்தை கலந்து 3 குழந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் அவர்களை கோணமேடு சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். 3 குழந்தைகளையும் சுடுகாட்டில் படுக்க வைத்துவிட்டு அவர் மட்டும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சுடுகாட்டில் குழந்தைகள் படுத்திருப்பதைப் பார்த்த மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சுடுகாட்டிற்கு சென்று 3 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சுடுகாட்டில் படுக்க வைத்துச் சென்ற பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications