கூடங்குளம் கடற்கரையை ஆய்வு செய்த 5 பேரை பிடித்த போராட்ட குழுவினர்
கூடங்குளம்: கூடங்குளத்தில் உள்ள கடற்கரை பகுதியை போட்டோ எடுத்து ஆய்வு செய்த 5 வாலிபர்களை, கூடங்குளம் போராட்டக் குழுவினர் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள கடற்கரை பகுதிகளின் நிலையை ஆராய்ந்து, அறிக்கை அளிக்க மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. தென் மாநிலங்களில் ஹைதராபாத்தை சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று ஒப்பந்த அடிப்படையில் சர்வே பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆழமான கடல் பகுதிகள், ஆபத்தான இடங்கள், கடல் வளங்கள் ஆகியவை குறித்து இக்குழுவினர் தகவல்கள் சேகரித்து வருகின்றனர். கடலோரத்தில் சுமார் 50 கி.மீ தூரத்துக்கு ஒரு இடத்தில் குறியீடுகளையும் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஆய்வு குழுவை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடற்கரை கிராமங்களில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு நேற்று நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளான கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி, இடிந்தகரை கடற்கரைகளில் ஆய்வு நடத்தினர்.
அப்போது இடிந்தகரை சுனாமி காலனியில் ஒருவரும், கூத்தங்குழியில் 4 பேரும் ஆய்வு செய்து கொண்டு இருந்தனர். ஆய்வுக்காக கேமராவில் சில போட்டோக்களை எடுத்தனர். இதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து போராடி வரும் கூத்தங்குழி, இடிந்தகரை கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே 5 பேரையும் கிராம மக்கள் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் 5 பேரும் இந்தியிலும், தெலுங்கிலும் பேசியதால், கூடங்குளம் போராட்டம் குறி்த்து உளவு பார்க்க வந்தவர்கள் என்றும், கடலோர வளங்களை ஆய்வு செய்த பிறகு அங்கு மக்கள் வாழ தகுதி இல்லாத இடம் என்று மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க அவர்கள் வந்திருப்பதாகவும் கருதி, கூத்தங்குழி பாதிரியார் இல்லத்திற்கு அழைத்து சென்றனர்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகி புஷ்பராயன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து, பிடிப்பட்ட 5 பேரிடமும் விசாரித்தனர். அதற்குள் இது குறித்து தகவல் அறிந்த ராதாபுரம் தாசில்தார் சுப்பிரமணியன், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி பிடிபட்டவர்களை மீட்டனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் 5 பேரும் கடற்கரை பகுதியை ஆய்வு செய்ய வந்தது தெரிய வந்தது. மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த ரசூல்(30) தலைமையில், சர்வேயராக குந்தன்குமாரும்(27), உறுப்பினர்களாக ஜிந்தல் குமார்(27), சுனில் குமார்(27), கார் ஓட்டுநர் அஞ்சுரெட்டி(32) ஆகியோரும் வந்தது தெரிய வந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications