தேர்தல் விதிமுறை மீறிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் - சங்கரன்கோவிலில் பறிமுதல்
சங்கரன்கோவில்: இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியான சங்கரன்கோவில் தொகுதிக்குள் நுழைந்த அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் சிவபதி ஆகியாரின் பாதுகாப்பு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களில் அமைச்சர்கள் கோகுலஇந்திரா, சிவபதி ஆகிய இருவர் உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.நேற்று நடந்த வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து அமைச்சர் கோகுலஇந்திராவும், திருச்சியில் இருந்து அமைச்சர் சிவபதியும் சங்கரன்கோவில் புறப்பட்டனர். அமைச்சர்களின் பாதுகாப்புக்கு போலீசார் உடன் வந்தனர்.
அப்போது சங்கரன்கோவில் எல்லையான கோவில்பட்டிக்கு அமைச்சர்கள் கோகுல இந்திராவும், சிவபதியும் வந்தனர். அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பாக வந்த வாகனங்களுக்கு சங்கரன்கோவில் எல்லைக்குள் நுழைய அனுமதி இல்லாததால், வழிப் பாதுகாப்பு வாகனங்களை திரும்பி செல்லும்படி அமைச்சர்கள் கூறினர்.
இதனையடுத்து அமைச்சர்களின் பாதுகாப்பு போலீசார் சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சிவகங்கை, திருச்சி செல்ல சங்கரன்கோவில் வந்தனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் அமைச்சரின் பாதுகாப்பு போலீஸ் வாகனங்களான (கோகுலஇந்திரா ) டாடா சுமோ - டிஎன் 63 ஜி 0500 என்ற எண் கொண்ட காரையும் , அமைச்சர் சிவபதி பாதுகாப்பு வந்த பொலிரோ டிஎன் 45 ஜி 0979 என்ற எண் கொண்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications