சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் முருகன் - பொன். ராதா கிருஷ்ணன் அறிவிப்பு
மதுரை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் முருகன் போட்டியிடுவார் என்று அக் கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனன் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. திமுக தவிர பிற கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியும் களத்தில் குதித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளரை மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவராக உள்ள முருகன் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த முருகன் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.