கேரளாவில் 8ம் வகுப்பு மாணவனின் கையை வெட்டிய + 1 மாணவர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளித் தேர்வில் காப்பியடித்ததை ஆசிரியர்களிடம் தெரிவித்ததால் 8ம் வகுப்பு மாணவரின் கையை பிளஸ் 1 மாணவர்கள் வெட்டியுள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளைம்பலம் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதாந்திர தேர்வு நடந்தது. இந்த தேர்வின் போது பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் காப்பி அடித்தனர்.
இதை அதே பள்ளியில் படித்த 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் பார்த்துவிட்டார். இது குறித்து அவர் ஆசிரியர்களிடம் கூறினார். இதனால் காப்பி அடித்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் எச்சரித்து அனுப்பியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் 8ம் வகுப்பு மாணவரைத் தாக்கினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த மாணவரின் இடது கையை கூர்முனை ஆயுதத்தால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஏடிஜிபி சந்திரசேகரன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.