புதிய மின்வெட்டு அமலுக்கு வந்தது-சென்னைக்கு 2 மணி நேரம்-இதர பகுதிகளுக்கு 4 மணி நேரம்
அதன்படி இதுவரை வெறும் ஒரு மணி நேர மின்வெட்டை மட்டுமே சந்தித்து வந்த சென்னை இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டுக்கு மாறியுள்ளது. அதேசமயம், கடந்த பல மாதங்களாக பல மணி நேர மின்வெட்டை சந்தித்து தொய்ந்து போயுள்ள தமிழகத்தின் இதர பகுதிகளில் இது 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,
மின்தட்டுப்பாட்டுப் பிரச்னையை எதிர்கொள்வதற்காக பல்வேறு உத்திகளை மின் உபயோகிப்பாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னை குறித்துத் தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. மாநிலத்தின் மின்தேவை ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்து வருகிறது.
எனவே பல்வேறு தரப்பினர் அளித்த யோசனைகளின் பேரிலும் அவற்றைச் செயல்படுத்தும் வழிவகைகளைக் கொண்டும் சில மின் விநியோகக் கட்டுப்பாட்டு முறைகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின் வெட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேர மின்தடை, மற்ற நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 4 மணி நேர மின்வெட்டு, வணிகப் பயனீட்டாளர்களுக்கு மாலை உச்ச நேர (மாலை 6 முதல் இரவு 10 வரை) மின் பயனீட்டுக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
இந்த மின்கட்டுப்பாடு முறைகள் தேவைக்கேற்றபடி அமல்படுத்தப்படும். மின் தேவையின் இடைவெளியைப் பொறுத்து மின் வெட்டின் அளவும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.
பள்ளிகளில் தேர்வு: உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரம் என்பதால், அந்த நேரங்களில் முடிந்த அளவுக்குத் தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எந்தெந்தப் பகுதிகளுக்கு எப்போது மின்வெட்டு என்பது குறித்த பட்டியல் ஏற்கனவே அந்தந்த மண்டலத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்வெட்டிலிருந்து பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விலக்கு தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு முடிந்தவரை தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின்விடுமுறை
இதேபோல தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை அளிக்கப்படுகிறது. மண்டலம் வாரியாக வாரத்தில் ஒரு நாள் மின்சார விடுமுறை விடப்படுகிறது. அதாவது, அந்த நாள் முழுவதும் அந்தப் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு மின்சார விநியோகம் இருக்காது.
இந்தப் புதிய மின் விடுமுறைத் திட்டம் மட்டும் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.