பிரபல தொழில் அதிபரின் மகன் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் மரணம்!
சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய பிரபல ஓட்டல் உரிமையாளரின் மகன் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
திருச்சி தென்னூரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் திருச்சியில் பிரபல ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகன் விஷ்ணு விக்ராந்த் (30). அவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகின்றார்.
கடந்த 23ம் தேதி விஷ்ணு விக்ராந்த் பிறந்த நாள் என்பதால் அதை திருச்சியில் உள்ள தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக கொண்டாட ஆஸ்திரேலியாவிலிருந்து, சிங்கப்பூர் வந்து அங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமானத்திலிருந்து வெளியே வந்த விஷ்ணு விக்ராந்த் அங்கு காத்திருந்த தனது பெற்றோர் மற்றும் உறவினரைப் பார்த்து கையசைத்தார்.
அப்போது பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்படும் இடத்தில் அவர் இருந்தபோது அவருக்கு திடீரென இருமல் வந்து தொடர்ந்து இருமினார். வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் ரத்தம் கசிந்து மயக்கமானார். உடனே அங்கிருந்த மருத்துவ குழுவினர் விஷ்ணு விக்ராந்த்தை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் சிறிது நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் மரணடைந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவருடைய உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பிறந்த நாள் கொண்டாட வந்த மகன் தங்கள் கண் எதிரிலேயே துடிதுடித்து இறந்த சம்பவம் அவரது பெற்றோர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.