கொள்ளையர்களிடமிருந்து சிக்கிய பணம் எந்த வங்கிக்குச் சொந்தம்?-குழப்பம்!
சென்னை: சென்னையில் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ஐந்து கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சிக்கிய ரூ. 14 லட்சம் பணம் எந்த வங்கியிலிரு்ந்து திருடப்பட்டது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பணத்தை வாங்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றனவாம்.
சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியைக் கொள்ளையடித்து ரூ. 20 லட்சம் பணத்தையும், கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் புகுந்து ரூ. 14 லட்சம் பணத்தையும் கொள்ளைக் கும்பல் அபகரித்துச் சென்றது.
இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடைய வினோத்குமார் மற்றும் வினயப் பிரசாத் உள்ளிட்ட ஐந்து பேரை வேளச்சேரியில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் வைத்து போலீஸார் என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தினர்.
அந்த வீட்டிலிருந்து ரூ. 14 லட்சம் பணம், 8 துப்பாக்கிகள், செல்போன்கள், சிம் கார்டுகள், அடையாள அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் நேற்று மாலைக்கு மேல் செய்தியாளர்களுக்கு காட்சிக்கு வைத்தது போலீஸ்.
இந்தப் பொருட்களை இன்று சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் ரூ. 14 லட்சம் பணம் குறித்து தற்போது ஒரு புதுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதலில் கொள்ளை நடந்தது பாங்க் ஆப் பரோடா வங்கியில். 2வது கொள்ளை நடந்தது கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில். அங்குதான் ரூ. 14 லட்சம் பணம் திருடப்பட்டது. எனவே வீ்ட்டில் சிக்கிய பணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணமாக இருக்கலாம் என போலீஸார் முதலில் சந்தேகித்திருந்தனர்.
ஆனால் இரு வங்கிகளுமே தங்களது பணத்தின் எண்களை குறித்து வைக்கவில்லையாம். இதனால் இந்தப் பணம் எந்த வங்கியிலிருந்து திருடப்பட்டது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தக்கொள்ளையர்கள் சென்னை தவிர பீகார், மும்பை, கொல்கத்தா என பல ஊர்களிலும் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர் என்பதால் இந்தப் பணம் அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வந்த பணமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை வங்கிகள் இந்தப் பணத்தை உரிமை கொண்டாடுவதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications