வீடுகள் மீது தானாக வந்து விழும் கற்கள்-பில்லிசூனியமா என மக்கள் அச்சம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வீடுகளின் மீது இரவில் கற்கள் தானாக வந்துவிழுகின்றன. இதனால் பயந்து போயுள்ள பொதுமக்கள், இதற்கு பில்லிசூனியம் காரணமா என்று கருதி வருகின்றனர்.
ஆனால் கற்களை வீசி வரும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த ருத்ராவதி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் வீட்டு கூரைகளின் மீது மர்மநபர்களால் கற்கள் வீசப்படுகின்றன.
குறிப்பிட்ட வீடு என்று இல்லாமல் எல்லா வீடுகளின் மீதும் கற்கள் வீசப்படுகின்றது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கற்களை வீசும் மர்மநபர்களை பிடிக்க, கிராம மக்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் இரவு முழுவதும் ரகசியமாக கண்காணித்தும், கற்கள் எங்கிருந்து வீசப்படுகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
வேறு வழியின்றி தவித்த கிராம மக்கள், இது குறித்து குண்டடம் போலீசார், கிராம நிர்வாக அதிகாரி நடராஜன், தாராபுரம் வருவாய் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அரசு அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையின் போதே மர்மமான முறையில் சில கற்கள் வந்து விழுந்தன. இதனால் செய்வது அறியாமல் திகைத்த, போலீசாரும் அதிகாரிகளும் கிளம்பி சென்றனர்.
கற்கள் வரும் இடத்தை கண்டறிய முடியாமல் தவிக்கும் கிராம மக்கள், இதற்கு பில்லி சூனியம் காரணம் என்று கருதி பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய், வீடுகளில் மஞ்சள் துணியில் எலுமிச்சம் பழம் கட்டி வைத்தல், பூசணிக்காயில் வேல் வரைந்து வைத்தல் உள்ளிட்ட பரிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கிராமவாசி ஒருவர் கூறியதாவது,
வீடுகளின் மீது மர்மமான முறையில் வந்து விழும் கற்கள் பெரியளவில் உள்ளன. இவை தானாக வந்து வீடுகளின் மீது விழும் போது ஓடுகள் உடைவதில்லை. ஆனால் நாங்கள் எடுத்து ஓடுகளின் மீது வீசினால் ஓடுகள் உடைந்து விடுகின்றன என்றார்.
மர்மமான முறையில் வந்து விழும் கற்களால், கிராம மக்களில் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.