சங்கரன்கோவிலில் வாகன சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நேற்று மாலை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது வேன் ஒன்றில் ரூ. 5 லட்சம் சிக்கியது. இதையடுத்து அந்த பணமும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி 6 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர வருவாய் துறையினர் அடங்கிய பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை சங்கரன்கோவில் அருகே நாலுவாசல் கோட்டை சோதனைச்சாவடியில் பறக்கும படை தாசில்தார் சாந்தகுமாரி தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை நடத்தியதில் அதில் ரூ.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேனை ஓட்டி வந்த மானாமதுரையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் மரக்கடைக்கு பணத்தைக் கொண்டு செல்வதாக தெரிவி்த்தார். ஆனால் அதற்கான ஆவணம் இல்லாததால் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு குருவிகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.