ஆண்டிப்பட்டியில் திடீரென நாக்கை அறுத்துக் கொண்ட கல்லூரி மாணவர்-மருத்துவமனையில் சிகிச்சை
தேனி: தேனியில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கருணாநிதி. அவருடைய மகன் வெற்றிவேல்(21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள அவர், வீரபாண்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த வெற்றிவேல் தனது நாக்கை அறுத்து கொண்டார். இதனை கண்ட உறவினர் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. வெற்றிவேல் திடீர் என்று தனது நாக்கை அறுத்துக் கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.
இது குறித்து வெற்றிவேலின் தந்தை கருணாநிதி கூறியதாவது,
வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இருக்கையில் அவன் எதற்காக நாக்கை அறுத்துக் கொண்டான் என்பது தெரியவில்லை. அவன் தான் காரணத்தை சொல்ல வேண்டும் என்றார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.