திருப்பதி திருமலையில் சேவை செய்ய பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு
மதுரை: திருப்பதி திருமலையில் ஒரு வாரம் தங்கி இருந்து சேவை செய்ய பக்தர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருப்பதி திருமலை கோவிலுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். இதனால் திருப்பதி திருமலையில் எப்போதும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
இந்த நிலையில் திருப்பதி திருமலையில் ஒரு வாரம் தங்கி அங்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி 18 முதல் 58 வயது வரை உள்ளவர்கள் இச்சேவையில் கலந்து கொள்ளலாம்.
வைகுண்டம் காம்ப்ளக்ஸில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படும் உணவுகளை வினியோகிப்பது, காவல் துறைக்கு உதவுவது, பூக்களை பறிப்பது, மாலை தொடுப்பது, லட்டு தயாரிக்க உதவுவது, பக்தர்களை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளில் விருப்பமான சேவையை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
ஒரு நாளைக்கு 5 மணி நேரம் சேவை செய்ய வேண்டும். சேவையில் ஈடுபடுபவர்கள் சேவையின் கடைசி நாளில், சுவாமி சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். சேவை நாட்களில் உணவு, தங்குமிடம் இலவசம்.
மார்ச் 3வது வாரத்தில் ஒரு வார சேவைக்காக மதுரையில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சேவையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழுத் தலைவர் கிரிதரனை 94433 94308 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.