அமெரிக்காவில் மருமகளைக் கொடுமைப்படுத்திய இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் மருமகளை கொடுமைப்படுத்தியதற்காக இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவைச் சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கணவர் விஷால் ஜகோடாவுடன் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்கு சென்ற நாளில் இருந்தே உமாவின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அவரை ஒரு அடிமை போன்று நடத்தியுள்ளனர். பொறுத்துப், பொறுத்துப் பார்த்த அவர் தான் அனுபவிக்கும் நரக வேதனை பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த மாமியார் பர்வீ்ன் ஜகோடா மற்றும் நாத்தனார் ரஜனி ஜகோடா உமாவின் கையில் சூடு வைத்தனர். தீக்காயத்திற்கு மருந்து போடாமல் பற்பசையைத் தடவி வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஜகோடா குடும்பத்தை கூண்டோடு கைது செய்தனர். ஆனால் மருமகளை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்ட மாமனாரை விடுதலை செய்தனர். மற்ற 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வரும் மே மாதம் 22ம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது. பர்வீனுக்கும், ரஜனிக்கும் 7 ஆண்டுகள் வரையும், விஷாலுக்கு 1 ஆண்டு வரையும் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.