ரீலில் ஈழத்தமிழர் பாசம்.. நேரில் “I am not interested” சொன்னாரா விஜய்?..வைரலாகும் வன்னியரசின் வீடியோ
சென்னை: தமிழக அரசியலில் தற்போது தவெக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் விஜயின் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, இலங்கை தமிழர் இனப்படுகொலை விவகாரம், காங்கிரஸின் அப்போதைய நிலைப்பாடு மற்றும் தற்போது தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றை இணைத்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு கிடைத்து வரும் நிலையில், விஜயின் அரசியல் நிலைப்பாடுகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.

இந்த சூழலில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், "இலங்கை தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபட்சேவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம் நடத்தியபோது, நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றோம். ஆனால் விஜய் 'I am not interested' என்று கூறி எங்களை திருப்பி அனுப்பிவிட்டார். பின்னர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும் சந்தித்தோம். ஆனால் அவரும் கையெழுத்து போட மறுத்துவிட்டார்" என வன்னி அரசு கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது அரசியல் பின்னணியுடன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இலங்கை தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. ஆனால் தற்போது அதே காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனுடன், விஜய் நடித்த "வில்லு" திரைப்படத்தில் இடம்பெற்ற "அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பேன்... ஏய் வில்லு வில்லு வில்லு..." என்ற பாடல் வரிகளையும் இணைத்து நெட்டிசன்கள் மீம்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications