திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு!
தூத்துக்குடி: சட்டம் ஒழுங்கு, மின்சாரம் தட்டுப்பாடு பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முயற்சிகளை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது, அவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், கடந்த ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தற்போதும் அது தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் துபாய்க்கு எலக்ட்ரிஷன் வேலைக்கு சென்ற இடத்தில் போதிய ஊதியம் கிடைக்காமல் பிரச்சனை ஏற்பட்டு சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ முயற்சியினால் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் இன்று துரை வைகோ எம்பி வில்லிச்சேரி கிராமத்திற்கு வந்து பொன்ராஜ் குடும்பத்தை சந்தித்து உரையாடினார்.
துரை வைகோ
சொந்த ஊர் திரும்புவதற்கு உதவி செய்த துரை வைகோ எம். பி. க்கு பொன்ராஜ் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து துரைவைகோ செய்தியாளார்களிடம் பேசுகையில்," வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இளைஞர்கள், தங்களை அழைத்துச் செல்லும் முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை இணையதளம் மூலம் தீர விசாரித்துச் செல்ல வேண்டும்.
தவெக அரசு
அவ்வாறு சரிபார்க்காமல் செல்லும் பட்சத்தில், சொன்ன வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படாமல், கூடுதல் பணிச்சுமையுடன் ஏமாற்றப்படும் சூழல் உருவாகும் என்றும், இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் சமூகச் சீர்கேடுகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் தொடர்வதாக விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது. கடந்த ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தற்போதும் அது தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
கால அவகாசம்
குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஒரு அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளன. போதை பொருள் கலாச்சாரத்தை எல்லா இடங்களிலும் நாம் பார்க்கிறோம். அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் புதிய அரசு ஈடுபட்டு இருக்கிறார்கள். புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. கேபினட் அமைப்பதே இப்போதுதான் முடிந்துள்ளது. காவல் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் அண்மையில்தான் நடந்துள்ளன.
'சிங்கப்பெண்' அதிரடிப்படை
அதே வேளையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் 'சிங்கப்பெண்' அதிரடிப்படை போன்ற பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு அறிவித்துள்ளது. பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முயற்சிகளை அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
மு. க. ஸ்டாலின்
மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக இருக்கட்டும், மின்தட்டுப்பாடு பிரச்சனையாக இருக்கட்டும், அரசாங்கம் பிரச்சினை இருக்கலாம் ஆனால் உரிய தீர்வு காண வேண்டும். மின்சாரம் உற்பத்திப் பற்றாக்குறையா, பகிர்மானப் பிரச்சினையா அல்லது பராமரிப்புப் பணிகளா என்பதைக் கண்டறிந்து அரசு உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும். திமுக மகளிர் மாநாட்டில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தற்போதைய அரசுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட அரசியல் விமர்சனங்கள் என்பது அந்தந்த அரசியல் இயக்கத் தலைவர்களின் தனிப்பட்ட கருத்து. அதற்கு அரசே உரிய பதிலை அளிக்கும் " என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications