ஏய், தள்ளு, தள்ளு, தள்ளு... போஸ் கொடுக்க சண்டை- அமைச்சர் முன் அதிமுகவினர் அடிதடி!
மதுரை: மதுரை மாநகராட்சி விழாவின் போது போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு முன்பு அதிமுகவினர் அடிதடியில் இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் குப்பைகளை அகற்றும் மாசில்லாத மதுரை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு, கலெக்டர் சகாயம், மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி துவங்கிய பிறகு அனைவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
பாலுவை தள்ளி நிற்கச் சொன்ன 'சாலை'!
அப்போது 4வது மண்டலத்தின் தலைவர் சாலைமுத்து தனது அருகில் நின்ற 39 வது வார்டு (கோரிப்பாளையம்) கவுன்சிலர் ஜி.கே.பாலுவை சற்று தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் பாலுவுக்கும், சாலைமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அமைச்சர் முன்னிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் விழாவிற்கு வநத்வர்கள் என்னடா இது ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுக்க இப்படி அடித்துக் கொள்கின்றனரே என்று அதிர்ச்சி அடைந்தனர்.
விட்டால் வேட்டியைக் கிழித்துக் கொள்வார்கள் போல் என்று பயந்து போன போலீஸார் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து, வாங்கண்ணே, வாங்கண்ணே என்று கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications