கணவருடன் வாழ விடாமல் தடுக்கிறார்- சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளரின் தந்தை மீது மருமகள் புகார்

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மீது அவரது 2வது மனைவி டாக்டர் ராணி புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் தேர்தலில் பரஞ்ஜோதி ஜெயித்தார், பின்னர் அமைச்சரும் ஆனார்.ஆனால் ராணியின் புகார் வலுவானதாக இருந்ததால் அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்த நிலையில், சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் குடும்பத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் இளையராஜா. இவரது மனைவி சமுத்திரக்கனி. இவர் நெல்லை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில்,எனது கணவர் இளையராஜா. இவருக்கும், எனக்கும் கடந்த மே மாதம் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் என்னையும், எனது கணவரையும் அவரது தந்தை சங்கரலிங்கம் சேர்ந்து வாழ விடவில்லை. மேலும், நான் எனது கணவருடன் வசித்து வந்த வீட்டையும் பூட்டி விட்டார்.
என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்காமல் தடுத்து வரும் சங்கரலிங்கம் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்குமாறு சங்கரன்கோவில் மகளிர் போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சங்கரலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியின் தந்தை மீது அவரது மருமகள் கொடுத்துள்ள புகாரால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications